காதலி மீது கைவைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
திருமணம் முடிக்கவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை (8) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்துகொள்ளவிருந்தார்.
காதலி வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், விடுமுறையை கழிக்க வீடு திரும்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் அப்பெண்ணின் வீட்டுக்கு புதன்கிழமை (07) சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிள் பெண்ணை தாக்கியுள்ளார்.
காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைச்சேனையில் பொலிஸாரால் வியாழக்கிழமை (08) கைது செய்யப்பட்டார்.
கைதான கான்ஸ்டபிள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.