வடக்கு – தமிழக மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கையா? சபையில் கேள்வி எழுப்பிய எம்பி
வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், குறித்த கேள்வியை கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் வினவினார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் அவரது இந்த கருத்தை சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் நிர்மலநாதன், கடலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் தற்போதும் இடம்பெறுவதாக ஆதங்கம் வெளியிட்டார்.
அத்தோடு இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக்கும் அரசங்கத்தின் இராஜதந்திர முயற்சியா என்றும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜதந்திர நடவடிக்கை என்ற கருத்து அரசியல் உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டதாக சாடினார்.
அத்துடன் கடந்த 5 வருட ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய அமைச்சர், விரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.