நாட்டுக்கு பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், நாட்டுக்கு பணம் அனுப்பும் போது, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிவழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தீர்வை வரிச் சலுகை அற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால், வங்கி முறையின் மூலம் சட்டரீதியாக பணம் அனுப்பும், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதோடு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் மின்சாரத்துக்கு மேலதிகமாக சூரிய சக்திமூலம் மின்னேற்றம் செய்யக்கூடிய வசதிகள் பொருத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேபோல் புலம்பெயர் பணியாளர்களின் வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ மேலும் தெரிவித்தார்.