வாடிக்கையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொழும்பு உணவகம்!
கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கிய உணவுப் பொதியில் எலியின் தலைப் போன்ற ஒரு பாகம் இருந்தமை வாடிக்கையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து , மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனிக்கு கோட்டை பொலிஸார் கொடுத்த அறிவுறுத்தலின் பிரகாரம், பிரதான உணவு பரிசோதகர் அடங்கிய குழுவொன்று உணவகத்திற்கு விஜயம் செய்துள்ளது.
அத்துடன் குறித்த உணவுப் பொதியின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த விலங்கு எலி அல்ல முயல் என்று கூறியதாக மருத்துவர் தெரிவித்தார்.
கோழி சாப்பாட்டு பொதியை அனுப்புமாறு தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும், தங்களது உணவகத்தில் கோழி மற்றும் இறைச்சி என்பன விற்கப்படுவதாகவும், தவறுதலாக இறைச்சியுடன் கூடிய சோற்றுப் பொதி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் , குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அதேவேளை, பரிசோதனைக்கு அனுப்பி உணவு மாதிரியின் அறிக்கை கிடைத்த பின்னர் குறித்த விலங்கு எதுவென அடையாளம் கண்டறியப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.