இலங்கையில் இப்படியொரு அவலம்: அந்தரத்தில் தொங்கும் புகையிரத பாதை
புத்தளம் – கொழும்பு இடையே உள்ள புகையிரத பாதையின் மங்கள எளிய அம்பலவெளி பகுதியில் புகையிரத பாதை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையினால் புத்தளம் வெள்ளத்தினால் மூழகியதுடன், 20 இற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 96 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், பல்வேறு வீதிகளும் தாழிறங்கியுள்ளதுடன், வீடுகள் பலவற்றின் பாதுகாப்பு மதில்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முழுமையாக உடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், புத்தளம் – சிலாபம் புகையிரத வீதியின் பல இடங்களில் புகையிரத பாதை சேதமடைந்து இருப்பதுடன், முந்தல் – மங்கள எளிய அம்பலவெளி பகுதியில் புகையிரத வீதி கடுமையாக சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும், சுமார் 100 மீற்றர் வரை பாரிய குழிகள் ஏற்பட்டு குறித்த புகையிரத பாதை சேதமடைந்து இருப்பதை காண முடிகின்றது.
இதேவேளை கடந்த காலங்களில் குறித்த பகுதி வெள்நீரில் மூழ்கிய போதும் புகையிரத பாதை இவ்வாறு பாரிய அளவில் சேதமடையவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு – புத்தளம் புகையிரத பாதை சேதமடைந்து காணப்படுவதால், கொழும்பில் இருந்து பங்கதெனிய வரையான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.