கோட்டையில் குவிக்கப்பட்ட இராணுவத்தால் பரபரப்பில் கொழும்பு;தேரர் உட்பட இருவர் கைது!
ஆர்ப்பாட்ட நிலைமைகளைக் கட்டுப்படுத்த கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு பேரணிகள் காரணமாக கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் அசாதாரண நிலைமைகள் ஏற்படுத்துவதனைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக லோட்டஸ் பார்க், ஒல்காட் மாவத்தை உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
தேரர் உட்பட இருவர் கைது
நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட இருவர் பொலிஸாரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று காலை 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த துறவிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முற்பட்டபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.