தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை வழமைக்கு
யானைகள் மோதியதால் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு மார்க்கம் ஊடான தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா தொடருந்து மோதி 6 காட்டு யானைகள் உயிரிழந்தன.
இந்த விபத்து கல்ஓயா தொடருந்து நிலையத்துக்கு அருகே நேற்று இரவு 11.20 அளவில் இடம்பெற்றது.
இதன் காரணமாக குறித்த தொடருந்தின் இயந்திரம் தடம்புரண்டதுடன் மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்து மார்க்கத்தின் ஊடான சேவை பாதிப்படைந்திருந்தது.
இந்த நிலையில், தடம்புரண்டுள்ள தொடருந்தை மீள் தடமேற்றும் பணிகள் நிறைடைந்துள்ளன.
இந்தநிலையில், கொழும்பு - மட்டக்களப்பு மார்க்கம் ஊடான தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.