அதிக நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க தீர்மானம்
அங்கீகரிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
இலவச நீர்
1988 ஆம் ஆண்டு முதல் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பாடசாலைகளுக்கு இலவசமாக நீர் வழங்கப்படுகிறது.
பாடசாலைகளுக்கு மாதமொன்றுக்கு 4 இலட்சம் லீற்றர் நீரை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு வழங்கப்படும் நீர், பாடசாலைகளின் தேவைக்காக அன்றி வேறு விடயங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பை விட அதிகளவில் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து மாத்திரம் கட்டணம் அறவிட எதிர்பார்த்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.