மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயக்குற்றி 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றம்!
நபர் ஒருவரின் மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயக்குற்றி 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வைத்தியசாலையில் கடந்த வாரம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
25 சதம் நாணயக்குற்றி
அவரை பரிசோதித்த வைத்தியர்கள், மூச்சுக்குழாயில் 25 சதம் நாணயக்குற்றி ஒன்று சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 2ம் திகதி, கார்டியோ - தொராசிக் அறுவை சிகிச்சை மூலம், மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நாணயத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது 32வது வயதில் நாணயத்தை வாயில் வைத்து உறங்கியபோது அதை விழுங்கி உள்ளார். அதன் பின்னர் அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் மூச்சுத்திணறல் அதிகரிக்கவே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நாணயத்தை அகற்றிய பின்னர் அவர் நலமுடன் இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சித்தார்த் லகோடியா மற்றும் எஸ்.கே.மாத்தூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.