கோவை மாணவி விவகாரம்; 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு
தமிழகத்தின் கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாநகர சைபர் கிரைம் பொலிஸ் துறையினரே குறித்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, திடீரென பாடசாலையை விட்டுவிலகி மாநகராட்சிப் பள்ளியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவி, கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதுடன் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட 3 பெயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தார்.
இதையடுத்து மாணவியின் செல்போன் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ததில், அவருக்கு ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்தது கண்டறியப்பட்ட நிலையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, ஆசிரியரின் பாலியல் தொல்லை பற்றி மாணவி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்ததையடுத்து சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனின் பெயரை வழக்கில் சேர்த்த காவல் துறையினர் அவரைத் தேடிவந்தனர்.
அவர் தலைமறைவானதோடு செல்போனும் அணைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் செல்போன் ஆன் செய்யப்பட்டபோது, மீரா ஜாக்சன் பெங்களூருவில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்த தனிப்படையினர், அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து நன்கு அறிந்த பிறகும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காததால், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ததாக பொலிஸ் துறையினர் தெரிவித்தனர்.
கோவைக்கு கொண்டுவரப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனிடம் பொலிஸர் 12 மணி நேரம் விசாரணை நடத்தியபின்னர் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மீரா ஜாக்சன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேவேளை மாணவியின் உடலை வாங்காது போராட்டம் நடத்திய உறவினர்கள், பள்ளி முதல்வர் கைது செய்யப் பட்டதை அடுத்து மாணவியின் உடலை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.