ஹட்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்குள் மோதல் ; பழைய மாணவர் உட்பட மூவர் கைது
ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில், வகுப்பறைக்குள் வைத்து மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் உட்பட மூவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர், குறித்த பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருந்ததாக ஹட்டன் தலைமையக பிரதான காவல்துறை பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச தெரிவித்தார்.

பாடசாலை மட்டத்தில் இந்தச் சம்பவம் ஆரம்பத்தில் சமரசம் செய்யப்பட்ட போதிலும், தாக்குதல் நடத்தப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் இன்று (28) பிற்பகல் ஹட்டன் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நாளை (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நீதவானின் ஊடாக அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.