இ.போ.ச. - தனியார் பஸ் ஊழியர்களுக்கிடையில் மோதல் ; பயணிகள் அவதி
பொலன்னறுவை பஸ் டிப்போவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஊழியர்களுக்கும் , தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் டிப்போ முகாமையாளர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போ நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் பயணிகளை ஏற்றிச் சென்றதைத் தொடர்ந்து, தனியார் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையிளால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலன்னறுவை மாவட்டத்தில் நீண்ட தூர சேவைகள்
இ.போ.ச. பஸ் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களையும், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களையும் வழித்தடத்தில் ஏற்றிச் சென்றுள்ளது. இதனால், தனியார் பஸ்களுக்கான பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மாத்தறையிலிருந்து சென்ற இ.போ.ச. பஸ்ஸில் டிப்போ முகாமையாளரும் பயணித்துள்ளார். இந்நிலையில், பொலன்னறுவை டிப்போவிற்கு முன்னால் இ.போ.ச பஸ்ஸை நிறுத்திய தனியார் பஸ் சாரதி டிப்போ முகாமையாளரைத் தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து பஸ் டிப்போவில் இருந்த ஊழியர்கள் தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் மூன்று ஊழியர்களும், தனியார் பஸ் ஊழியர்கள் இருவரும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் நீண்ட தூர சேவைகள் உட்பட கிட்டத்தட்ட 135 பஸ் இயக்கப்படுவதாகவும், தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை டிப்போவில் பல பஸ் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊழியர்கள், பஸ்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க பிரதான வாயில் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளதுடன் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் கீழ் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.