மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்... ஊழியர்கள் இருவர் வைத்தியசாலையில்!
பதுளை மத்திய பஸ் நிலையத்தில் பேருந்து ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் மாலை (25-03-2024) பதுளை – முத்தெடுவேகம இடையே இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் லங்கம பேருந்தின் ஊழியர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பேருந்து இயங்கும் நேரம் குறித்த வாக்குவாதத்தின் போது, தனியார் பேருந்தின் சாரதி, லங்கம பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த லங்கம ஊழியர்கள் இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தையடுத்து, லங்கம ஊழியர்கள் குழுவொன்று தனியார் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.