பிள்ளையான் கட்சியின் முக்கிய புள்ளிகளிடம் சி.ஐ.டி விசாரணை
வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சி.ஐ.டி விசாரணை
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் க கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பாக பிள்ளையானை கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினையடுத்து மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியலயத்தை கடந்த 30 ஆம் (30-5-2025) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சுமார் 12 மணித்தியாலம் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன் போது அங்கிருந்து ஒரு சற்றலைற் போன் உட்பட 3 கையடக்க தொலைபேசிகள், சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, ஐபொட் ஒன்று, 9 மில்லிமீற்றர் ரக கைதுப்பாக்கியின் 5 ரவைகள் , றிப்பிற்றர் ரக துப்பாக்கியின் 5 வெற்று தோட்டாக்களை மீட்டனர்.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட சற்றலைற் போன் தொடர்பாக் ரி.எம்.வி.பி கட்சியின் ஜயாத்துரை ரவி மற்றும் அவரின் உதவியாளர் குமரன் ஆகிய இருவரையும் நேற்று (5) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சி.ஐ.டியினர் வரவழைத்து சுமார் 5 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவர்களை விடுவித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று (6) பகல் வாழைச்சேனை பேத்தாளையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவரான ஜெயம் என்பவரது வீட்டை சிஜடியினர் முற்றுகையிட்டு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை விடுவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.