யாழில் பாடசாலை மாணவிகளை கொடூரமாக தாக்கிய அருட்சகோதரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி அகப்பைக் காம்பால் அடித்து துன்புறுத்தியதாக கூறி நேற்று (28-05-2024) விடுதியில் இருந்த மாணவிகள் 11 பேர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதனையடுத்து மாணவிகளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்திய வேளை மாணவிகளின் உடலில் தழும்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது.
அது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் அருட் சகோதரியை கைது செய்து, ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, அவரை இன்றைய தினம் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (29-05-2024) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், அருட்சகோதரியை 50000 ரூபா காசு பிணை, ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று, மாணவ விடுதிக்கு அருட்சகோதரி செல்ல கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மாண்வர்களுடனோ, அவர்களின் பெற்றோர்களுடனோ தொடர்பு கொள்ள கூடாது எனவும் நிபந்தனையும் விதித்துள்ளது.