சிறுமி துஸ்பிரயோகம்; சந்தேக நபர்களை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்!
வெலிகம, கொலேதந்த பிரதேசத்தில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களை விடுவிக்குமாறு கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் கைதானவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து இன்று காலை வெலிகம பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை நான்கு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இரு இளைஞர்களையும் விடுவிக்குமாறும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களை இனங்கண்டு கைது செய்யுமாறும் கோரியே பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.