நிலவை நெருங்கும் சந்திராயன்-3
சென்னை - சந்திராயன்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நான்காவது முறையாக நிலவின் சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் நுழைந்து, பயணத்தை துவங்கியது.
படிப்படியாக சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது 153x163 கி.மீ என சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் (17.08.2023) விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்படுகிறது.
எதிர்வரும் (23.08.2023) ஆம் திகதி நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்க உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வடிவமைத்தது.
இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த (14.07.2023) திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டன.
சந்திரயான் விண்கலம் (01.08.2023) ஆம் திகதி புவி நீள் வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது.
தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதையில் பயணித்து வருகிறது.
எதிர்வரும் (23.08.2023) சாஃப்ட் லேண்டிங் செய்யப்படவுள்ளது.
மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் “சந்திரனை நோக்கிய சந்திரயான்-3 பயணத்தில் ஒரு படி மேலும் முன்னேற்றம் கண்டுள்ளோம்.
இலக்கின் படி சந்திரயான்- 3 153x163 கி.மீ என சுற்றுப்பாதையில் தற்போது பயணித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்