மின் தடை குறித்து CEB பொறியாளர்கள் சங்கம் விளக்கம்
இன்று (09) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்சார தேவை குறைவாக இருப்பதும், மொத்த மின்சார உற்பத்தியில் பெரும் சதவீதம் ஒப்பீட்டளவில் நிலையற்ற சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதும் முழு மின்சார கட்டமைப்பின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணம் என இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலைமையை முறையான விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டுயுள்ளது.
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் 33 kV (33 kV Bus Bar) அருகே ஏற்பட்ட திடீர் மின் தடையுடன் குறைந்த மின்சார தேவை மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக நிலையற்றதாக இருந்த தேசிய மின்சார அமைப்பு சமநிலையற்றதாக மாறியது.
தானியங்கி அவசரகால செயலிழப்பு முகாமைத்துவ செயன்முறையால் அமைப்பை மீட்டெடுக்க முடியவில்லை. இதன் விளைவாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
முந்தைய பல ஞாயிற்றுக்கிழமைகளில் தேசிய மின்சார அமைப்பு இது போன்ற ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கி இருந்த போதிலும், மின்சார சபை அமைப்பு கட்டுப்பாட்டுப் பிரிவின் திறமையால் முழுமையான மின்வெட்டு தடுக்கப்பட்டதாகவும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இன்றைய தேசிய மின்சார அமைப்பின் மோசமான நிலை காரணமாக மின் தடையை தடுத்திருக்க முடியாது என்று அனுமானித்தாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டது.
எதிர்காலத்தில் இதுபோன்ற மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மின்கல (Battery) சேமிப்பு வசதிகள் மற்றும் பம்ப் சேமிப்பு (Pump Storage) நிலையங்கள் தொடர்பான திட்டங்களை விரைவுபடுத்த இலங்கை மின்சார சபையும் எரிசக்தி அமைச்சும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் அமைப்பு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் ஏனைய பிரிவினரும் முழு மின்சார அமைப்பையும் விரைவாக மீட்டெடுக்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன, மேலும் சில தரப்பினர் இது தொடர்பாக சில உண்மைக்கு புறம்பான கருத்துக்களைப் பரப்ப முயற்சிப்பதை அவதானிக்க முடிவதாகவும் இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.