55 வயது பெண்ணிடமிருந்து கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேமித்த குற்றச்சாட்டின் கீழ் பாணந்துறை, மஹாவில பகுதியில் 55 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
குறித்த சந்தேக நபர் தனது வீட்டில் இருந்த சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதற்கான முறையான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனையின் போது சந்தேக நபரின் வீட்டிலிருந்து 978,060 ரூபாய் ரொக்கப்பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண் பாணந்துறை மகாவில பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், மீட்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டவையா என்பது குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.