போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை காரணமாக இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக பொலிஸார் முன்னரே அறிவித்திருந்த போதிலும், அதைப் புறக்கணித்து மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு எதிராக இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காத்தான்குடி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 21 வயது இளைஞர் ஒருவர், சமீபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.