கார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞனின் உயிரை பறித்த மதுபோதை
பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியின் திம்புலாகல, நாமல்பொக்குண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இன்று (22) பிற்பகல் 1.00 மணியளவில் காரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
அத்துடன், விபத்தில் பலத்த காயமடைந்த மற்றொரு நபர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திம்புலாகல, மகாஉல்பத பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அலட்சியமான மற்றும் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என மனம்பிட்டிய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.