பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல்களை அச்சிட அமைச்சரவை அங்கீகாரம்
2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடநூல்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
71 வகையான பாடநூல்
2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடநூல்களை அச்சிடுவதற்காக 317 வகையான பாடநூல்களில் 71 வகையான பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடமிருந்து அச்சிடுவதற்காக 2024.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை 2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல்களை விநியோகிப்பதற்குத் தேவையான எஞ்சியுள்ள 246 பாடநூல் வகைகளை அச்சிடுவதற்காக தேசிய போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அதன்படி அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள குறைந்த விலைமனுவை சமர்ப்பித்துள்ள 24 அச்சகங்களுக்கு, 1, 6 மற்றும் 10 ஆம் தரங்கள் தவிர்ந்த ஏனைய தரங்களுக்கான பாடநூல்களை அச்சிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.