யாழில் இருந்து சென்ற பஸ் விபத்து ; பெண் பலி, 08 பேர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் சிறிய ரக லொறியொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சனிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த மேலும் எட்டு பேர் மதவாச்சி மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மதவாச்சி , கடவத்கம, ஹல்மில்லவெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
மதவாச்சி பகுதியில் இருந்து ரம்பாவ பகுதிக்கு பயணித்த லொறியொன்றுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி. சென்றுகொண்டிருந்த பஸ் வண்டி முந்திச் செல்வதற்கு முயற்சித்த வேளை பஸ் வண்டியின் சாரதிக்கு பஸ் வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் போனமையின் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் லொறியில் பயணித்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.