யாழ் பல்கலைக்கு அருகில் மருத்துவ கழிவுகள் எரிப்பு; யாழ் மாநகரசபை அதிரடி நடவடிக்கை!
யாழ் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் தனியார் வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
யாழில் பிரபலமான நொதேர்ன் சென்ரர் தனியார் வைத்தியசாலையின் நீண்ட கால மருத்துவக் கழிவுகள் நேற்றிரவு அங்கு தீயிட்டு கொழுத்தப்பட்டதாக் பிரதேச மக்கள் முறைப்பாடளித்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டின் பெயரில் மாநகர சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த சுகாதாரத் துறையினர் ஆதாரங்களைத் திரட்டியதுடன், குறித்த தனியார் வைத்தியசாலை பிரதிநிதியை அழைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வைத்தியசாலை பிரதிநிதி, கழிவுகள் எரிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதுடன், அதை அகற்றுவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் பொலிசாருக்கும், சுற்றாடல் அதிகாரசபையினருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அதேவேளை வைத்தியசாலை அனுமதி பெறும்போது கழிவு அகற்றுவது தொடர்பாக சமர்ப்பித்த தகவல்களை வைத்தியசாலை மீறியுள்ளது. இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சுற்றாடல் அதிகாரசபை வைத்தியசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கோரவுள்ளது.
அத்துடன், ஆபத்தான மருத்துவ கழிவுகளை பொறுப்பில்லாமல் மக்களிற்கு அபாயமேற்படுத்தும் விதமாக எரித்தழித்த விவகாரத்தில், நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலை மீது, யாழ் பொலிசார் ஊடாக யாழ் மாநகரசபை வழக்கு தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
யாழ்.பல்கலைக்கு அருகில் தனியார் மருத்துவமனையின் அட்டூழியம்!