சுதந்திர தினத்தில் சர்ச்சை ; சமூக ஊடகங்களில் வைரலான பௌத்தக் கொடி விவகாரம்
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 78ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, அங்கு நிறுவப்பட்டிருந்த பௌத்தக் கொடி அகற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
2600ஆவது புத்த ஜெயந்தியை நினைவுகூரும் வகையில் ஏற்றப்பட்டிருந்த பௌத்தக் கொடி, சுதந்திர தின கொண்டாட்டங்களை காரணமாகக் கொண்டு அகற்றப்பட்டதாகவும், அதை மூன்று நாட்களுக்குள் மீண்டும் ஏற்ற வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த விடயம் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதத்துக்குள்ளானது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த பௌத்தக் கொடி சுதந்திர சதுக்கத்திலிருந்து நிரந்தரமாக அகற்றப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முன்பாக ஜனவரி 29ஆம் திகதி நடைபெற்ற ஒத்திகைகளின் போது பௌத்தக் கொடி அந்த இடத்தில் காணப்பட்டதாகவும், பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெற்ற பிரதான சுதந்திர தின நிகழ்வின் போது மட்டுமே அது தற்காலிகமாக அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்ததையடுத்து, பெப்ரவரி 5ஆம் திகதி மீண்டும் அந்த பௌத்தக் கொடி சுதந்திர சதுக்கத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக முக்கிய ஊடக அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனையடுத்து, சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் தொடர்பில் தவறான புரிதல் ஏற்பட்டிருக்கலாம் எனவும், குறித்த விடயம் தொடர்பில் உண்மை நிலை தெளிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.