யாழில் குடும்பஸ்தர் மீது மூர்க்கமாக தாக்கி ரிக்ரொக் பதிவு; வெளியான பகீர் பின்னனி!
யாழ். நெல்லியடி, அத்தாய் பகுதியில் ஒருவரை வாள், கோடாரி, கொட்டன்களால் தாக்கி வீடியோ எடுத்து, ரிக்ரொக்கில் பதிவிட்ட சம்பவத்தின் பின்னனியில் தாக்குதலுக்காக ஜேர்மனியிலிருந்து பணம் அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 9 பேர் கைதான நிலையில் , கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த இந்த கும்பல், நேற்று காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
முன்பகையால் தாக்குதல்
அத்தாய் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே தாக்கப்பட்டார். அந்த பகுதியில் வன்முறை குழுக்கள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மேற்படி குடும்பஸ்தர் மீதான தாக்குதல் சம்பவமும் முன்பகை அடிப்படையிலேயே நடந்துள்ளது.
நபர் ஒருவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு லிசாரணையில் முன்னிலையாக சென்ற போதே, வன்முறை கும்பல் அவரை வழிமறித்து தாக்குதல் நடந்தியது.
காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது
தாக்குதல் பற்றி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
கைதான 3 பேர் அத்தாய் பகுதியை சேர்ந்தவர்கள். 6 பேர் இராஜகிராமத்தை சேர்ந்தவர்கள். 18- 25 வயதுக்குட்பட்டவர்கள்.
தாக்கப்பட்டவருக்கும், ஜேர்மனியில் உள்ள ஒருவருக்குமிடையில் முன்பகை உள்ளதாகவும், ஜேர்மனி நபர் அனுப்பிய பணத்துக்காக தாம் குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.
கைதான ஒருவரின் கையடக்க தொலைபேசியில், தாக்குதல் தொடர்பான வீடியோ காணப்பட்டதுடன் அதனை ரிக்ரொக்கிலும் சந்தேக நபர் பதிவிட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.