கனடா தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய விசமிகள்; அதிர்ச்சியில் தமிழர்கள்!
கனடா Brampton நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கனடா தகவல்கள் தெரிவிக்கின்றன.
Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் இந்த மாதம் 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழின அழிப்பு நினைவகம்
ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவகம் திறக்கப்பட்டது.
இந்த நினைவகம் செவ்வாய்க்கிழமை (27) நள்ளிரவுக்கு பின்னர் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தமது முகங்களை மூடிய நிலையில் இனந்தெரியாத நபர்கள் நினைவகத்தை சேதப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் குறித்து Peel பிராந்திய காவல்துறையில் முறையிடப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் இனம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் நிறுவப்பட்டமைக்கு இலங்கையில் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட பல தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில் தமிழின அழிப்பு நினைவகம் சேதப்படுத்திய சம்பவம் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.