காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி காதலன் அரங்கேற்றிய சம்பவம்
களுத்துறை, இங்கிரிய, ஹதபான்கொட பிரதேசத்தில் காதலன் தனது காதலியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இருவருக்கும் இடையில் காதல் முறிவு
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனுடன் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்த நிலையில் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் கடந்த 16 ஆம் திகதி இரவு வழமைப்போல ஆடைத் தொழிற்சாலையில் கடமைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது வீதியில் மறைந்திருந்த ஒருவர் இந்த பெண்ணின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவரிடமிருந்த தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பிரதேசவாசிகளின் உதவியுடன் பெண் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பில் பெண் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதோடு கண்களில் மிளகாய் பொடியை தூவி தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் தனது காதலன் என அந்த பெண், பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இது தொடர்பில் இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.