மட்டக்களப்பில் டிக்டாக் மூலம் காதலியின் தாயை அச்சுறுத்திய 17 வயது இளைஞன்! அதிர்ச்சி காரணம்
மட்டக்களப்பில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு சிறுமியின் காதலன் மற்றும் அவரின் நண்பன் இணைந்து வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தொலைபேசி டிக்டாக் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் காதலன் மற்றும் அவரின் நண்பனை கடந்த சனிக்கிழமை (25-03-2023) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 17 வயது சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் 17 வயது சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள், கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக் டாக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவ தினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.