பெரெஹாவை பார்வையிட சென்ற சிறுவன் மாயம்; ரயிலில் சிக்கிய சந்தேக நபர்!
கண்டி தலதா பெரெஹாவை பார்வையிட சென்ற 9 வயது சிறுவன் மாயமான நிலையில், கொழும்பில் இருந்து அவிசாவளைக்கு சென்ற ரயிலில் சிறுவனை ஏமாற்றி அழைத்துச் சென்ற நபர் மஹரகம ரயில் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு புகையிரதத்தில் சந்தேகத்திற்கிடமான நபருடன் குழந்தையொன்று பயணிப்பதை அவதானித்த பயணிகள் இது தொடர்பில் மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தலவத்துஓய் மைலப்பிட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர் நேற்று கண்டி தலதா பெரஹராவை பார்வையிட வந்த போது பெற்றோருக்கு தெரிவிக்காமல் சட்டவிரோதமான முறையில் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக சிறுவனை கொழும்புக்கு அழைத்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சிறுவனை காணவில்லை என கண்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்