சென்னை விமான நிலையத்தில் தேடுவாரற்று கிடந்த பயணியின் உடல்!
சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் பயணி ஒருவரின் உடல் தேடுவாரற்று கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பயணி திடீரென உயிரிழந்ததை அடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவரது உடல் மழையில் நனைந்து சாலையின் ஓரத்தில் இருந்ததாக சென்னை தகவல்கள் கூறுகின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சென்னை பல்லாவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த தீபக் பால். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது நண்பர்களுடன் சென்னையில் புலம்பெயர்ந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தீபக் , நேற்று சென்னையில் இருந்து கவுகாத்திக்கு மதியம் 3:55க்கு கிளம்பும் விமானத்தில் முன் பதிவு செய்துள்ளார். விமானம் கிளம்ப தயாராகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை அளித்த பின்னர் தீபக் உடல்நிலை தேறியதாக கூறப்படும் நிலையில், இன்று காலை அசாமிற்கு விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அதிகாலை வேளையில் மீண்டும் தீபக் பாலுக்கு விமான நிலையத்தில் உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தீபக் பால் மரணமடைந்ததால், அவரது உடல் மீண்டும் விமான நிலையத்திற்கு அவரது உடல் எடுத்து வரப்பட்டது.
எடுத்து வரப்பட்ட உடல் சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் போடப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீபக் உடல் மழையில் நனைந்து சாலையின் ஓரத்தில் இருந்ததாகவும் ,அவரது உடலை சுற்றி நான்கு பாதுகாப்பு படையினர் காவலில் இருந்த நிலையில், உடல் மூடப்பட்டோ, இறந்த உடலுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதை இன்றி அவரது உடல் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் விமான நிலைய அதிகாரிகள் மீனம்பாக்கம் காவல் துறையிடம் கொடுத்த தகவலையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.