கஜகஸ்தான் போராட்டத்தால் பெருமளவு சரிவை சந்தித்த பிட்காயின் ; பெரும் அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கஜகஸ்தான் உலகில் இரண்டாவது பெரிய நாடாக பிட்காயின் சுரங்க வலையமைப்பை கொண்டுள்ளது. இந்த நிலையில் அங்கு நடைபெறும் போராட்டமானது கிரிப்ட்டோகரன்சி மதிப்பை பெருமளவு சரிவடைய வைத்துள்ளது.
கஜகஸ்தானில் இயற்கை வளங்கள் அதிகம் இருப்பினும் அதை மண்ணிலிருந்து பிரித்தெடுத்துச் சுத்திகரிக்கும் பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்களே அதிக அளவில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில் செவ்ரான், எக்சோன் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்றுமதியில் ஈடுபடுகின்றன. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆதரவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தான் அரசு சமையல் எரிவாயு மீதான அதன் விலை வரம்பை நீக்கியதனால் எரிவாயுவின் விலை அதிகரித்தது .

அதாவது ஒரே இரவில் விலை ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்து லிட்டருக்கு 120 டென்ஜ் ஆக உயர்ந்ததை கண்டித்து கஜகஸ்தான் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்த போராட்டம் புரட்சியாக வெடித்து வன்முறையாக மாறிய நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் அரசு பதவி விலகியது.
அத்துடன் போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடிப்பதுடன், பலர் உயிரிழந்த நிலையில் ரஷ்ய நாட்டு ராணுவத்தின் உதவியை கஜகஸ்தான் அரசு கோரியுள்ளது.
இந்தநிலையில் கஜகஸ்தானில் நடந்து வரும் போராட்டங்கள் பிட்காயின் நெட்வொர்க்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இணையம் முடக்கியதால் நாட்டின் பெரிய பிட்காயின் சுரங்க வலையமைப்பு செயலற்ற சூழல் உருவாகியுள்ளது.
இதனால் பிட்காயின் நெட்வொர்க்கின் உலகளாவிய அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் பிகாயின் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
உலகில் இரண்டாவது பெரிய நாடாக கஜகஸ்தான் பிட்காயின் சுரங்க வலையமைப்பை கொண்டுள்ளது. அங்கு நடக்கும் இந்த போராட்டம் அந்த வலையமைப்பை செயலிழக்கச் செய்துள்ளது.

நாடு தழுவிய இணைய முடக்கத்தால், கஜகஸ்தானை தளமாகக் கொண்ட சுரங்கத் தொழிலாளர்கள் பிட்காயின் நெட்வொர்க்கை அணுக முடியாத சூழல் உள்ளது. இது கஜகஸ்தானை மட்டுமின்றி உலகளாவிய கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
உலக அளவில் வியாழன் அன்று கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு பெருமளவு சரிந்தது. பிட்காயினின் விலை வியாழனன்று இரவு 9 மணிக்குப் பிறகு 41,222.41 டாலராக ஆக சரிவடைந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதிக்கு பிறகு இந்த அளவுக்கு பிட்காயின் விலை இந்த அளவு சரிந்துள்ளது. செய்தி நிறுவனங்களின் தகவல்படி பிட்காயினுக்கான உலகளாவிய ஹாஷ்ரேட்டில் கஜகஸ்தான் 18 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
ஹாஷ்ரேட் என்பது ஒரு கிரிப்டோகரன்சியை வெட்டுவதற்கு ஒரு வினாடிக்கு தேவைப்படும் கணக்கீட்டு சக்தியின் அளவீடு ஆகும். இந்த நிலையில் வியாழன் அன்று கஜகஸ்தானில் இணையம் நிறுத்தப்பட்டதால், உலகளாவிய ஹாஷ்ரேட் சுமார் 14 சதவீதம் குறைந்துள்ளது.
ஏனென்றால், அதிக எண்ணிக்கையிலான சுரங்கத் தொழிலாளர்கள் நெட்வொர்க்கில் இருந்தால், சுரங்கத்திற்கு அதிக கணினி சக்தி தேவைப்படுகிறது. கஜகஸ்தானை தளமாகக் கொண்ட சுரங்கத் தொழிலாளர்கள் நெட்வொர்க்கில் இல்லாததால், அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ளவர்கள் பிட்காயினைச் சுரங்கம் செய்வதை எளிதாக்கியிருக்கும்.
இருந்தபோதிலும் பிட்காயினின் விலையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. பிட்காயின் உருவாக்கவதற்கான சுரங்கத்திற்கு பெரிய கணக்கீட்டு அமைப்புகள் தேவைப்படுகின்றன, அதையொட்டி நாள் முழுவதும் இயங்குவதற்கு கணிசமான அளவு ஆற்றல் தேவைப்படுகிறது.
இதன் காரணமாக, இத்தகைய பிட்காயின் சுரங்கங்கள் அதிக ஆற்றல் நுகர்வு மற்றும் அதன் விளைவாக உலகின் பல்வேறு பகுதிகளில் கார்பன் உமிழ்வு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றன.

இதன் காரணமாக இதுபோன்ற கிரிப்ட்டோகரன்சி சுரங்கங்களை சீனா கடுமையாக கட்டுப்படுத்தியது. இதனால் பல சுரங்கத் தொழிலாளர்கள் கஜகஸ்தானுக்குத் தளம் மாறினர். இப்போது, இந்த சுரங்கத் தளங்களில் பெரும்பாலானவை நாட்டின் நிலக்கரி ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலால் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவிற்குப் பிறகு, கஜகஸ்தான் கடந்த ஆண்டு பிட்காயின் சுரங்கத்திற்கான உலகின் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்தது. சீனாவால் ஏற்பட்ட தலைவலி தற்போது கஜகஸ்தானிலும் உருவெடுத்து வருகிறது.
அந்நாட்டு அரசு தற்போது நாட்டில் பதிவுசெய்யப்படாத சுரங்கத் தொழிலாளர்களை ஒடுக்க திட்டமிட்டுள்ளது. அவர்கள் பதிவுசெய்யப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களை விட இரண்டு மடங்கு அதிக சக்தியைப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஆக மொத்தத்தில், கஜகஸ்தானில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் இப்போது கஜகஸ்தானின் மொத்த ஆற்றல் உற்பத்தித் திறனில் சுமார் 8 சதவீதத்தைப் பயன்படுத்தி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.