இஷாரா செவ்வந்திக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்; அதிகாரிக்கு நேர்ந்த கதி
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரினது பிறந்தநாள கொண்டாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சிறையில் உள்ள சந்தேக நபருக்கு கேக் வெட்டிக் கொண்டாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் காவல்துறை தலைமையகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உடனடியாக இடமாற்றம்
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினுள் குறித்த சந்தேகநபரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குத் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் கொழும்பு வலயத்துக்குப் பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியதுடன், இது குறித்து காவல்துறை தலைமையகத்திற்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை களப் படையணித் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் தமது தொழில்சார் ஒழுக்கக்கோவையைப் பின்பற்றத் தவறியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் இச்செயலில் ஈடுபட்டமை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து பாரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
மேலும் காவல்துறை தடுப்புக்காவலில் உள்ள ஒருவருக்கு காவல் நிலையத்திற்குள்ளேயே இவ்வாறான விசேட சலுகைகள் வழங்கப்பட முயன்றமை காவல்துறை திணைக்களத்திற்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.