பெரும் அதிர்ச்சி! இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம்

Sahana
Report this article
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார்.
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (25.03.2025) அவர் உயிரிழந்துள்ளார்.
மனோஜ் தனது 48ஆவது வயதில் காலமானார்.
சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மனோஜ் பாரதிராஜாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறது. அப்போது முதலே வீட்டில் இருந்து அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மனோஜ் பாரதிராஜா மாலை 6 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு வரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் தற்போது சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் .
இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமான மனோஜ் பாரதிராஜா, அதன் பிறகு சமுத்திரன், பல்லவன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இருப்பினும், அவரது நடிப்பிற்குப் பெரியளவில் வரவேற்பு கிடைக்காததால் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். அதன் பிறகு இயக்குநர்கள் மணிரத்தினம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநர்களாகவும் சில காலம் பணியாற்றினார்.
2005ம் ஆண்டு அவர் சாதுரியன் படத்தில் நடித்து வந்தார் அப்போது உடன் நடித்த நடிகை நந்தனா என்ற நடிகையை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஆர்த்திகா, மதிவதனி என 2 மகள்கள் உள்ளனர். சாதுரியன் படத்திற்குப் பிறகு நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்த மனோஜ், சமீப காலமாக மீண்டும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார். கடைசியாக அவர் 2022ல் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.