யாழ் மாநகர சபையை ஏமாற்றும் பெரு வணிக நிறுவனங்கள்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் இயங்கும் பெரு வணிக நிறுவனங்கள் சில பிரதேச சபை ஒன்றினுள் குடியிருப்பாளர் ஒருவர் செலுத்தும் வரியை விட குறைவான வரியை செலுத்தி வருவதாக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (22) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குடிபுகு சான்றிதழ்கள்
அதன் போதே ஆளூநர் இத்தகவலை வெளியிட்டார். இதன்போது ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாநகரசபை எல்லைக்குள் உள்ள பெரு வணிக நிறுவனங்கள் குடிபுகு சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாமல் இயங்குகின்றன.
இதனால் அவர்கள் மாநகர சபைக்குச் செலுத்தும் வரியானது, பிரதேச சபையொன்றிலுள்ள குடியிருப்பாளர் செலுத்தும் வரியைவிடக் குறைவானது. இதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பு என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாற்றங்களை ஏற்படுத்துவோம் எனவும் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மேலும் தெரிவித்தார்.