கண்ணைப் பறிக்கும் நிறத்தைக் கொண்ட கேரட்டின் நன்மைகள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க இயற்கை கொடுத்த காய்கறிகளை தினசரி உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். காய்கறிகளானது உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளன.
அதில் கண்ணைப் பறிக்கும் வகையிலான நிறத்தைக் கொண்ட ஒரு காய்கறி தான் கேரட். கேரட்டில் கண்களின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய வைட்டமின் ஏ ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.
இது தவிர கேரட்டில் இன்னும் பல்வேறு சத்துக்கள் உள்ளன. கேரட்டை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் உட்கொள்ளலாம்.
ஆனால் கேரட்டின் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக உடல் உறிஞ்சி உடலுறுப்புக்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும்.
கண்களுக்கு நல்லது
கேரட்டில் பீட்டா கரோட்டீன் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பீட்டா கரோட்டீன் உடலினுள் வைட்டமின் ஏ-ஆக மாற்றமடைந்து கண் பார்வையை மேம்படுத்தவும், பராமரிக்கவும் உதவுகிறது.
உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படும் போது பார்வையில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த வைட்டமின் ஏ குறைபாட்டை சரிசெய்யாமல் விட்டுவிட்டால் கண் பார்வை போகவும் வாய்ப்புள்ளது.
எனவே பார்வை தெளிவாக தெரியவும், கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கேரட் பெரிதும் உதவி புரியும்.
பொலிவான சருமம்
கேரட் சருமத்திற்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை குடித்து வந்தால் அது முதுமைக் கோடுகள், சரும சுருக்கங்கள் மற்றும் பிற முதுமைக்கான அடையாளங்களைத் தடுக்க உதவி புரிவதோடு சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும்.
ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன.
ஆகவே தினமும் இந்த ஜூஸை குடிக்கும் போது சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிப்பதைக் காணலாம்.
அஜீரண கோளாறைத் தடுக்கும்
மலச்சிக்கல் பிரச்சனையை அடிக்கடி சந்திப்பீர்களா? அப்படியானால் கேரட் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
இதனால் மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
சர்க்கரை நோய்க்கு நல்லது
கேரட் ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கேரட் ஜூஸானது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள மற்றும் பராமரிக்க உதவி புரிகிறது.
இதில் கலோரிகள் குறைவு மற்றும் சர்க்கரை அளவும் குறையும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கேரட் ஜூஸைக் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
இதய நோயைத் தடுக்கும்
தற்போது மாரடைப்பால் நிறைய பேர் இறக்கிறார்கள். ஒருவருக்கு இதய நோய் வருவதற்கு அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை தான் முக்கிய காரணம். ஆனால் கேரட் ஜூஸில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளன.
இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறைகிறது.