போரதீவுப் பற்று பிரதேச சபை தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்பு
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மண்டூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விமலநாதன் மதிமேனன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து அது வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.
இன்று (02) போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச சபைக்குச் சென்று தனது கடமைகளைப் பொறுப்பேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதன்போது அப்பிரதேச சபையின் பிரதித் தவிசாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன தங்கராசா கயசீலன், மற்றும் ஏனைய தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும், க.பிரபு ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டு பதவியேற்றுள்ள தவிசாளரையும், ஏனைய உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
10 வட்டாரங்களைக் கொண்ட போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 16 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும், 5 உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பிலும், 3 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.