சதொச நிவாரண பொதி தொடர்பில் அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்
நாட்டில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் 1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula gunawardane) தெரிவித்துள்ளார்.
இன்று (26-12-2021) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
சதொச விற்பனை நிறுவனத்தினூடாக 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி 1998 ரூபாவிற்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, நாளைலிருந்து (27-12-2021) சீனியை பெற்றுக்கொள்ள முடியாத நுகர்வோர் 1998 ரூபா பெறுமதியான அந்த பொதியில் சீனிக்கு பதிலாக 2 கிலோ கிராம் சம்பா அரிசியை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில், இதற்கு மேலதிகமாக இதுவரை பெற்றுக்கொடுக்கப்பட்ட 5 கிலோ கிராம் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கிராம் அரிசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் மாத்திரமே அமுலில் இருக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula gunawardane) குறிப்பிட்டுள்ளார்.