ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல முற்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் கைது
போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிக்கான போலி வதிவிட வீசாவைப் பயன்படுத்தி கட்டாரின் டோஹா நகர் ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் 22 வயதுடைய , சிலாபம் - மாரவில பகுதியைச் சேர்ந்தவராவார்.
குறித்த இளைஞன் நேற்று முன்தினம் புதன்கிழமை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.655 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு பிரிவிற்கு சென்று, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த குடிவரவு - குடியகழ்வு அதிகாரியிடம் அதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இதன் போது இத்தாலிக்கான வதிவிட வீசா சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்டமையால் குறித்த அதிகாரி அதனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.