பண்டாரகம துப்பாக்கிசூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
பண்டாரகம - பொல்கொடை பாலத்திற்கு அருகில் நேற்று (21) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் பாணந்துறையைச் சேர்ந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரியான 57 வயதான லலித் குமார கொடகொட என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாரி மீது 20 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்
டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி மீது 20 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. உயிரிழந்தவர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சமயன் என்பவரின் கொலைக்கு உதவியதாகவும், அந்த வழக்கிலிருந்து முன் பிணையில் அவர் வெளியே வந்திருந்தாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.