வவுனியா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை... ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்!
வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்க்கு நீதிகிடைக்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்றையதினம் (21-08-2024) மாலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தபோது,
குழந்தையின் தாய் வலி தாங்கமுடியாமல் பல மணித்தியாலங்கள் துடித்தபோதும் அவருக்கு சிகிச்சை செய்யவில்லை. இவ்வாறனவர்களை நம்பி இந்த வைத்தியசாலையக்கு சிகிச்சைக்காக எப்படி செல்வது.
இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் எமக்கு துளியும் நம்பிக்கையில்லை.
இவ்வாறான நிலையில் சுகாதார அமைச்சினுடாக ஒரு குழு நியமிக்கப்பட்டு இதற்கான நீதியான விசாரணையினை மேற்கொள்ளவேண்டும்.
அதுபோலவே குழந்தையின் சட்டவைத்திய பரிசோதனையினையும் கொழும்பு வைத்தியர்கள் மூலம் முன்னெடுக்கவேண்டும். மேலும், பொறுப்பே இல்லாத இந்த வைத்தியசாலைக்கு 3 பணிப்பாளர்கள் இரண்டு நிர்வாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.
எனவே இச்சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் வரைக்கும் பொதுமக்கள் இங்கு மகப்பேற்றுக்காக வரவேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று மாலை குழந்தையின் சடலத்தை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.