இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க
இரவில் சில குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு போதிய ஓய்வை அளிக்காது. தூக்கத்தை சீர்குலைக்கும். வயிறு கனமாகி விடும். வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஏற்படலாம். அதிலும் சில உணவுகளை இரவில் சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைத்து தூக்கமின்மைக்கு வித்திடும்.
அல்லது தூக்கம் அடிக்கடி தடைபடும். அதனால் நிம்மதியான உறக்கத்தை அனு பவிக்க முடியாது. காலையில் எழுந்திருக்கும்போது உடல் சோர்வாக காணப்படும். அப்படி தூக்கத்தை பாதிக்கும் உணவுகள் பற்றியும் அதனை ஏன் இரவில் சாப்பிடக்கூடாது என்பது குறித்தும் பார்ப்போம்.

தூக்கத்தை பாதிக்கும் உணவுகள்
ஆரஞ்சு பழம் : ஆரஞ்சு பழம் ஆரோக்கியமானதுதான். ஆனால் அதிக அளவு சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இரவில் ஆரஞ்சு பழம் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சினையை அதிகரிக்கக்கூடும்.
மசாலா பொருட்கள் : இரவு உணவில் அதிகப்படியான மசாலா பொருட்களை சேர்த்து சாப்பிடுவது வயிற்று எரிச்சலை அதிகரிக்க செய்யும். அதனால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதுடன் இரவில் நிம்மதியாக உறங்க முடியாது.
தக்காளி :சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் தக்காளியில் மிகுந்துள்ளன. அதனால் இரவில் தக்காளி சட்னி, தக்காளி சாஸ் அதிகம் சேர்த்துக்கொள்வது வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

ப்ரோக்கோலி-காலிஃபிளவ்ர்: இந்த இரண்டு காய்கறிகளும் உடல் நலத்திற்கு சிறந்தவைதான். ஆனால் இரவில் ப்ரோக்கோலியையோ, காலிஃபிளவரையோ சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வாயுத்தொல்லை. வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் உண்டாகக்கூடும்.
டார்க் சாக்லெட்: டார்க் சாக்லெட்டில் காபின் உள்ளது. இது மூளையை விழித்திருக்க செய்யும் ஆற்றல் கொண்டது. அப்படியிருக்கையில் இரவில் டார்க் சாக்லெட் சாப்பிடுவது தூக்கம் வருவதில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

பாதாம்-முந்திரி : பாதாம், முந்திரி இவை இரண்டும் ஆரோக்கியமானவைதான். ஆனால் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. இவற்றை இரவில் சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். வயிற்றை கனமாக உணரச் செய்யும்.
தயிர்: தயிர் கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப்பொருள். ஆனால் இரவில் உட்கொள்வது சிலருக்கு வயிறு உப்புசம், அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத் தக்கூடும். அதிலும் செரிமான மண்டலம் உணர்திறன்மிக்கதாக (சென்சிட்டிவ் ஸ்டொமக்) இருப்பவர்கள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.