இலங்கையில் புதிய சிம் அட்டைகளை வாங்கவுள்ளோரின் கவனத்திற்கு ; வெளியான முக்கிய தகவல்
சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, புதிய சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் சிம் அட்டையைப் பெறும் வகையிலான நடைமுறை பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமுல்படுத்தப்படவுள்ளதாக TRCSL பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விதிமுறைகள்
நேற்று (10) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களையும் 100 சதவீதம் அடையாளம் காணக்கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது இதன் மூலம் சட்டவிரோதச் செயல்களுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை குறைப்பதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.