அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி; விசாரணை தீவிரம்
கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியமையை அடுத்து, நாடாளுமன்றத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தடுப்பதன் மூலம் பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க சில அரசியல்வாதிகள் முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு குறித்து பொலிஸாரின் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனம்
இதன் விசாரணைகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற சில தகவல்களின் அடிப்படையிலேயே அண்மையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற வளாகம் மேல் நீதிமன்ற வளாகம் உயர்நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம், சட்டமா அதிபர் திணைக்களம் அலரிமாளிகை ஜனாதிபதி செயலகம் பிரதமர் அலுவலகம் மற்றும் இராணுவம். தலைமையகம் போன்ற இடங்களே பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்டன.
இந்தநிலையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் அதிருப்தி வெளியிட்டப்பட்ட நிலையில், ஜனாதிபதி நாடு திரும்பியதும், அது தொடர்பான வர்த்தமானி திரும்பப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.