மத்திய கிழக்கில் தாக்குதல்கள் ; எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிப்பு
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 20% இற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுமாறு ஈரான் விடுத்த அறிவிப்பால், நேற்றையதினம் (28) முதல் எரிபொருள் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மோதல் தீவிரமடைந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை மசகு எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 73 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது (இது ஜூலை மாதத்திற்குப் பின்னரான அதிகபட்ச விலையாகும்).

நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், விலை 100 டொலர்களைத் தாண்டலாம் என வர்த்தக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், OPEC+ அமைப்பு இன்று (01) கூடி, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 137,000 பீப்பாய்களுக்குப் பதிலாக, நாளொன்றுக்கு 411,000 பீப்பாய்கள் அல்லது அதற்கும் மேலாக உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
சவுதி அரேபியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 8 நாடுகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன.
விநியோகப் பற்றாக்குறையை ஈடுகட்ட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே உற்பத்தியை அதிகரித்துள்ளன.
ஏனைய நாடுகளிடம் இதற்கான உபரித் திறன் இல்லாமை பெரும் சவாலாக இருந்தபோதிலும், நெருக்கடிக்கு மத்தியில் OPEC+ உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.