பொலிஸாருக்கு தகவல் வழங்கியோர் மீது 15 பேர் தாக்குதல்
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கிய இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த 15 பேர் கொண்ட குழுவினர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இருவரும் படுகாயமடைந்து மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்கள்
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் தொடர்பில் இருவர் வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, நேற்று மாங்கேணி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற 15 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதன் பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் செல்வபுரம் மாங்கேணி சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மட்டு. போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்ய வாகரை பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.