அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; ஈரான் அதிரடியால் மத்திய கிழக்கில் பதற்றம்!
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்து வரும் நிலையில், கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அல்-உதெய்த் விமானப்படைத் தளம்
கத்தாரின் தோஹாவில் அமைந்திருக்கிறது அல்-உதெய்த் விமானப்படைத் தளம். 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) பரப்பளவில், கிட்டத்தட்ட 100 விமானங்கள் இருக்கின்றன.
சுமார் 10,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் இருக்கின்றனர். மேலும் இந்தத் தளம் அமெரிக்க மத்திய கட்டளையின் (CENTCOM) முன்னோக்கிய தலைமையகமாகவும் செயல்படுகிறது.
இந்த தளம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட விமான நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்கிறது. மேலும் ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான மையமாகவும் உள்ளது. '
இஸ்ரேலை தாக்குவதை விட எங்களுக்கு அமெரிக்காவை தாக்குவது எளிது' என ஈரான் முன்னரே அமெரிக்காவை எச்சரித்திருந்தது.
அதற்கு அடிப்படைக் காரணம் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்படும் அல்-உதய் விமான நிலையம். ஈரான் மீதான் தாக்குதலுக்கு பதிலடியாகதான் இந்த விமான நிலையத்தை சரமாரியாக தாக்கியிருக்கிறது ஈரான்.
இது தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்கு சமம்.
நாங்கள் இலக்கு வைத்த தளம் கத்தாரில் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. அதனால், பொதுமக்களுக்கான ஆபத்து குறைவுதான் எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதல் ஈரானிய இராணுவத்தின் சித்தாந்தப் பிரிவான புரட்சிகர காவல்படையினரால் நடத்தப்பட்டதாக ஈரானின் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு கத்தார் கண்டனம்
அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலைக் கண்டித்து கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி எக்ஸ் பதிவில்,
"இது கத்தார் அரசின் இறையாண்மை, அதன் வான்வெளி, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் அப்பட்டமான மீறல் என்று கூறினார். "இந்த வெட்கக்கேடான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு சமமான முறையில் நேரடியாக பதிலளிக்கும் உரிமையை கத்தார் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.