யாழில் ஆலய உப தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இச்சம்பவத்தின் தொடர்ச்சியா? எழுந்த சந்தேகம்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி உலவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக நபரொருவர் மீது கோடாரி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (06-06-2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் உலவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய நபரொருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் கோடரி ஒன்றினால் குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வேலைக்கு செல்வதற்காக சென்று கொண்டு இருந்தபோது ஆலயத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் வைத்து வழி மறித்த கும்பல் இளைஞரை சராமாரியாக தாக்கியதில் குறித்த இளைஞன் கைகளில் பலத்த காயம் அடைந்தார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உலவிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் இராணுவத்தினர் தேர் இழுப்பது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், அண்மையில் ஆலயத்தை சுற்றி எல்லை வேலியிட முனைந்த போது, கிராம இளைஞர்களின் ஒரு பகுதியினர் தகராற்றில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடந்ததா என்றும் சந்தேகிக்கிப்படுகிறது.