மாதாந்த கூட்டத்தில் பெரியசாமி பிரதீபன் மீது கொடூர தாக்குதல்!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (13) பிற்பகல் 1 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த தாக்குதல் தொடர்பில் தெரியவருவதாவது, மஸ்கெலியா பிரதேச சபை எல்லைக்குள் கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்கள் தொடர்பில் எழுந்த பிரச்சினையை மையமாகக் கொண்டே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்வேளை, ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எஸ்.ஏ. திசாநாயக்கவால் கண்ணாடி குவளையில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதீபன் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த பிரதீபன் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் பெரியசாமி பிரதீபனின் இடது கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆரியரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.