மட்டக்களப்பில் நள்ளிரவில் கொத்து போட்டவர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில், கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பணியாளர் மீது மதுபோதையில் வந்த இளைஞர் குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்திற்கு நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 'கண்ணா' என்பவரின் தலைமையிலான இளைஞர் குழுவினர், கொத்துரொட்டி ஓடர் செய்துள்ளனர். இதன்போது அதனை தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, கொத்துரொட்டி தயாரிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், குறித்த குழுவினர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் (Helmet) அந்தப் பணியாளரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பணியாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்துள்ள மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.